இலக்கியகர்த்தா ஒருவரைப் பற்றிய புத்தகம் என்பதே தெரியாமல் ஏதோ ஒரு குறுநாவல் போல இந்தப் புத்தகத்தை வெகு வேகமாகப் படிக்க முடிந்தது. நடை அப்படி ஒரு ஓட்டம். பேசுவது போல எழுதி இருக்கிறார். அவர் எழுதுகையிலேயே நாளைக் காலையில் இதை அச்சடிக்கக் கொடுக்க வேண்டும் என்று முடிவோடு எழுதியது போன்ற ஒரு வேகம். நினைவிலிருந்து எழுதுபவரைப் போல ஒரு ஆற்றொழுக்கு. இதில் உள்ள பெருமளவு விவரங்கள், பிரகாஷுக்குப் பத்துப் பதினைந்தாண்டுகள் கழித்தே தமிழின் நவீன இலக்கிய உலகுக்குப் பரிச்சயம் பெற்ற என் போன்றாரில் பலருக்கும் தெரியாத விவரங்கள். தமிழில் சென்னை போன்ற ஒரு மாநகரின் தாக்கம் குறைந்து இதர பெருநகரங்களும், சிற்றூர்களும் அதிகத் தாக்கம் பெறத் துவங்கிய 80களில், 90களில் இலக்கியத்துக்கு வந்தவர்களுக்கோ இந்த உலகம் வினோதமானதாகவே இருக்கலாம்.