நாவல் என்பது பொழுதுபோக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்தவல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும்போது, அது பழங்காலத்துக் காவியத்துக்கு நிகர் ஆகின்றது. காவியம் என்பது உரைநடை வளராத காலத்தில் செய்யுள் வடிவில் அமைந்த கலைச்செல்வம்; நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும் கலைச்செல்வம். இதுதான் வேறுபாடு.
சிறந்த பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழ் இனமும் மொழியும், நாடும், பண்பாடும் சிறப்படைய மறுமலர்ச்சி இலக்கியம் உதவ வேண்டுமென்று கருதி வருகிறவர்களில் நானும் ஒருவன். இப்படிக் கருதிப் பணிபுரிவதில் பெருமைப் படுகிறேன்.
குறிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்; கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சி மலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை. நித்திய வாழ்வு வாழ்பவள் அவள்.