நாரதர் என்றால் பக்திக்கு மறு பெயர். புராணங்களில் பரவலாகத் தென்படும் கதாபாத்திரம். திரிலோக சஞ்சாரி என்று பெயரெடுத்தவர். அதாவது, மூவுலகங்களுக்கும் சென்று நன்மை செய்வதே அவர் கொள்கை. இன்றைய நிலையில் சொல்வதானால் எங்கும் தடையின்றி செல்லக்கூடிய நவீன நிருபர். நாரதர் என்றால் பொதுவாக நம் நினைவுக்கு வருவது ‘நாரதர் கலகமே’. ஆனால், நாரதர் எப்போதுமே கலகம் செய்துகொண்டிருக்க மாட்டார். இந்த நூலில், அவர் கலகம் செய்யாத ஜனரஞ்சகமான கதைகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. நாரதர், பல பிறவிகள் எடுத்து அனுபவங்களைப் பெற்ற கதைகள் பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த உலகில் தர்மமும் நியாயமும் செழித்தோங்க அவர் பல்வேறு பிறவிகள் எடுத்ததாக வரும் கதைகள் இந்த நூலுக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கின்றன. இப்படி நாரதர் சம்பந்தப்பட்ட சுவையான கதைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் ஆர்.சி.சம்பத். பல கதைகள் புதிய கதைகள். சில கதைகள் தெரிந்த கதைகள்தான் என்றாலும், சுவைகூட்டி, படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது. ஆனால், எந்தக் கதையை எடுத்தாலும் அடுத்து என்ன வரும் என்ற ஆவல் எழுவது நிச்சயம். நாரதர் கதைகளில் தென்படும் பல சூட்சுமங்கள் நம் வாழ்க்கைக்குப் படிப்பினை. குறிப்பாக, யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்; எப்படிப் பேச வேண்டும்; எதைச் செய்யக்கூடாது என்பதை இந்தக் கதைகளின் மூலம் நாம் அறியலாம்.