டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியின் அடிச்சுவட்டில் அமைகிறது இந்நூல். வாழ்க்கையை உற்றுநோக்கித் தாம் புரிந்துகொண்ட
உண்மைகளை நூலாக இங்கு தந்திருக்கிறார் ஆசிரியர். வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குப் பல பயனுள்ள செய்திகளை நூலில் தந்திருக்கிறார். இவரது அணுகுமுறை அனுபவ அடிப்படையில் அமைகிறது. இவரது கணிதப்புலமை செய்திகளைப் பகுப்பாய்வு நோக்கில் அணுக உதவி செய்திருக்கிறது. முக்கியமான நேரங்களில் நாம் எடுக்கும் முடிவே நம் வாழ்க்கையின் போக்கை நிச்சியிக்கும். முடிவெடுப்பது எவ்வாறு? திருக்குறள், சிலப்பதிகாரம் கொண்டு வழி செல்கிறார் முருகன்.
வாழ்க்கை என்பது நம்மைச் சுற்றிப் பல வட்டங்களில் அமைவது. நாம் தான் மையப்புள்ளி. நம்மைச்சுற்றி குடும்பம் ஒரு வட்டம். சமுதாயம் ஒரு வட்டம். இந்த வட்டங்கள் எவ்வாறு நம்மைப் பாதிக்கின்றன என்று நம் சிந்தனையைக் கிளறுகிறார். மனித வாழ்க்கையை உளவியல் நிலையில் அணுகலாம். சமுதாய நிலையில் அணுகலாம், பொருளாதார நிலையிலும் அணுகலாம். இந்த மூன்று நிலைகளிலும் அணுகிப் பார்க்கிறார் அன்பர். இறுதியில் 'பூந்தோட்டமா வாழ்க்கை ' என்று கேட்கத் தோன்றும்.