என்னிடம் தரப்பட்ட தேசியக் கொடியும் தியாக சீலர்களும் என்ற புத்தகத்தைக் கண்ணுற்றேன். இந்த நூலின் வரைவுப் படிவத்தைப் படித்துப் பார்க்கின்ற வாய்ப்பினை நான் பெற்றபோது ஒரு வரலாற்று நூலாக இது இருக்கும் என்றுதான் எண்ணினேன், ஆனால் படித்து முடித்தபின் அரிய செய்திகளை அழகான தமிழில் உணர்ச்சியலை பொங்க அவர் எழுதியிருப்பதைக் கண்டு இது ஆய்வுநூலாய்ப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மகிழ்ந்தேன். எத்துணை அரிய தகவல்கள் சுவை குன்றாமல் எவ்விடத்தும் தொய்வு இல்லாமல் ஆசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. இந்நூல் இக்கால இளைஞர்கள் ஒவ்வொருவரும் படித்து வணங்க வேண்டிய ஒன்று. கொடிகள் சமுதாயத்தில் தோன்றிய விதத்திலிருந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதைப் பற்றிச் சொல்லிருப்பது வரை விளக்கமாக இதில் காணலாம்.