அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது.
பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள்
யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்'
அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது,
எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம்
வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை
மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம்
காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.