ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வில் இத்தனை கஷ்டங்களா என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். தனக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பங்கள் என்று கடவுளை நொந்துகொள்ளவும் செய்கிறார்கள். செய்யும் வினைகளுக்கு ஏற்பவே அத்தனைக் கஷ்டங்களும் வருகின்றன என்று தெரிந்தும் அவர்களின் புலம்பல்கள் வேடிக்கையானது. துன்பங்கள் யாவும் தடைகள்தான், அதைக் கடந்தால்தான் சாதனை என்று உணர்வதே இல்லை. மனித வடிவம் ஏற்று வந்த தெய்வங்களுக்கே சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்கள் வந்ததை நமது புராணங்கள் தெரிவிக்கின்றன. அதை எல்லாம் கேட்டும் நாம் மாறவில்லை. ஸ்ரீராமருக்குத்தான் எத்தனைத் துன்பங்கள். நாடிழந்தார், நல்ல உறவுகளைத் துறந்தார். அதுமட்டுமா? அன்னை சீதாதேவியை ராவணன் கடத்திச் சென்றதும், அனலில் விழுந்த புழுவாக ராமர் துடித்தார். ஒவ்வொரு கணமும் சீதையைக் காணவே வாழ்ந்தார். ராமாயணம் முழுக்க எத்தனைத் தடைகளை ராமர் கடந்தார் எண்ணிப் பாருங்கள். அன்னை சீதையை மீட்க சுக்கிரீவன் ஹனுமானை தேர்ந்தெடுத்தார். தெய்வத்தை மீட்கச் செல்லும் காரியம் என்றாலும், தடை வராமல் இருந்துவிடுமா என்ன? வரத்தான் செய்தது. மீட்கப்போவது சிவாம்சமாகிய ஹனுமான் என்னும் பலம்மிக்க தெய்வம், மீட்கப்படப் போவதும் திருமகள் எனும் சீதாதேவியை. அப்போதுமா தடை வரும் என்று கேட்கலாம். வந்தது; மூன்று வகையான தடைகள் வந்தன.