இப்படி நிறைய காண்டாமிருகங்களையும் மான்களையும், புலிகளின் கால் தடங்களையும் பார்த்தபடியே சவாரி செய்து கொண்டிருந்தோம். அற்புதமான ஒரு அனுபவம் அது. காலை நேரம் என்பதால் சூரியனின் கிரணங்கள் அத்தனை அதிக வீரியம் கொண்டு நம்மைச் சுடாது. பல்வேறு பறவைகள், மிருகங்கள் ஆகியவை தங்களது குரல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, யானை மீது அமர்ந்தபடி அவற்றை ரசித்துக் கொண்டே சவாரி செய்து கொண்டிருந்தோம். வழியே ஒரு காண்டாமிருகம் தனது குட்டியுடன் யானைப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. குட்டியில் எல்லாமே அழகு எனச் சொல்வது வழக்கம். காண்டாமிருகத்தின் குட்டியும் வெகு அழகு. அவ்வளவு அழகாய் அம்மா/அப்பாவுடன் காட்டுக்குள் உலவுகிறது! குட்டியுடன் இருக்கும் காண்டாமிருகத்தின் அருகே செல்வது கொஞ்சம் ஆபத்தானது என்பதால் யானைச் சவாரி அழைத்துச் செல்லும் பாகர்கள் அவற்றைச் சுற்றி நிற்பது இல்லை. சற்று இடைவெளி விட்டே நிற்கிறார்கள்.