பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு சிறுவர்கள் தங்களை ஹீரோக்களாகக் கற்பனை செய்துகொண்டதோடு சரி. ஆனால் தாத்தா சொன்ன கதைகள் ஒரு சிறுவனை ஹீரோவாக்கிய கதை தெரியுமா..?
நெல்லை மாவட்டம் களக்காட்டிலிருந்து ஐம்பதுகளில் சினிமா ஆசையோடு சென்னை வந்த சங்கரசுப்ரமணியன் பெரு முயற்சி செய்து ஏவி.எம்மின் ‘ஓர் இரவு’, ‘பராசக்தி’ படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தார். பகீரத முயற்சி செய்தும் தன் நடிப்பாசை நப்பாசையானது புரிந்து, தன் அனுபவக் கதைகளை மகள் வயிற்றுப்பேரனிடம் சொல்லி அவனை ஹீரோவாக்கக் கனவு கண்டார். ஏறத்தாழ அறுபது வருடங்களுக்குப் பின் அந்தக்கனவு உயிர்த்து அவர் நினைத்தபடியே அவர் தலைகாட்டிய ஏவி.எம்மின் 175வது படத்தில் அவரது பேரன் ஹீரோ ஆனான். அந்த ஹீரோ விதார்த்.
‘‘இப்ப தாத்தா உயிரோட இல்லை..!’’ என்ற விதார்த், தன் சிறகு முளைப்பதற்கு முன்பான கூட்டுப்புழுக் கதையைச் சொன்னார்.