நடுநாடு எனப் போற்றப்படும் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திட்டக்குடி என அழைக்கப்படும் திருவதிட்டக்குடி என்னும் திருத்தலம். சோழமண்டலத்து புள்ளிருக்கும் வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) என்ற திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்புரியும் அருள்மிகு வைத்தியநாத சுவாமியின் பெயரினையே இத்தலத்தினில் உரையும் இறைவனும் பெற்று விளங்குவது சிறப்பு. நடு நாட்டுத் திருத்தலங்களில் சக்தி வழிபாட்டினை சிறப்பித்து கூறும் தலங்களில் இத்தலமே முதன்மையானது . சிவன் இத்தலத்தில் நோய்தீர்க்கும் மருத்துவராக அருள்புரிவதால் வைத்தியநாதர் எனும் திருப்பெயர் பெற்றார். இவ்விடம் முன்னொரு காலத்தில் வேங்கை மரம் சூழ்ந்த இடமாக திகழ்ந்ததால் வேங்கை வனம் எனப்பட்டது. அசனம் என்பது வேங்கை மரத்தை குறிக்கும் வடமொழி சொல்லாகும் .அதனால் தாயாருக்கு வேங்கை வன நாயகி எனும் பெயரும் உண்டு.இக்கோயிலின் பெருமைகளை அறிந்த பல மன்னர்கள் இக்கோயிலை கட்டி ஏராளமான திருப்பணிகளை செய்துள்ளனர்.தீராத நோய்வாய்ப்டடவர்கள் இங்கு வந்து வைத்தியநாத சுவாமியையும் , அசனாம்பிகை அம்மனையும் வழிபட்டால் நோய் குணமடையும் என்பது வரலாறு. கண் இழந்த குலோத்துங்க சோழன் கண் பார்வை பெற்றது , ராமன் பிரம்மஃகத்தி தோஷம் நீங்கப் பெற்றதும் இத்தலத்தில்தான் . எட்டு லிங்களும் கோயிலின் உள்ளே அமைந்திருப்பது சிறப்பு. இது ஏழு துறைகளுள் (வதிட்டதுறை-திட்டக்குடி) 5 ஆவது துறையாகும்.சூரியன் தன் கிரகணங்களால்(பங்குனி மாதம் மீன ராசியில் மூலவர் மீது சூரிய கதிர்கள் பாயும் ) சிவனை வழிபடும் தலங்களுல் இதுவும் ஒன்றாகும். வதிட்டருக்கும் அருந்ததிக்கும் திருமணம் நடைபெற்ற தலம்.சுவாமி திருமணக்கோலத்தில் (வலப்புறம் அம்மன்) வீ்ற்றிருப்பதால் இங்கு திருமணம் நடைபெறுவது சிறப்பு.