’ஒருவர் குள்ளமாக முதுகு வளைந்து இருப்பார்; ஒரு மதகுருவுக்குரிய அங்கியை அணிந்திருக்கும் அவர் மிக மிக வயதானவர்;அவருக்கு நிச்சயம் நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.வெண்மையான அவரது தாடியில் கூட இலேசான பச்சை நிறம் படர ஆரம்பித்து விட்டது,அவ்வளவு வயதானவர் அவர்;ஆனால் எப்போதும் ஒரு புன்முறுவலுடனேயே அவர் இருப்பார்; அவரது முகம் அப்போதுதான் சொர்க்கத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த தேவதையின் முகம் போன்ற பிரகாசத்துடன் இருக்கும்.இரண்டாமவர் உயரமானவர்;அவரும் கூட வயதானவர்தான்.அவர் குடியானவனைப் போன்ற கிழிசலான ஆடைகளை உடுத்தியிருப்பார்.அகலமான அவரது தாடி பழுப்புக்கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.அவர் நல்ல வலுவானவர்.நான் அவருக்கு உதவி செய்ய வருவதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தை நிமிர்த்துவதைப் போலத் தனியாகவே என் படகை நிமிர்த்தி வைத்து விட்டார் அவர்.அவரும் கூட அன்பானவர்;கலகலப்பானவர். மூன்றாமவர் உயரமானவர்;பனியைப் போன்ற வெண்மையான அவரது தாடி அவரது முழங்கால் வரை நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.உரம் படைத்த அவரது கண்ணிமைகள் சற்றே முன் துருத்தியபடி தொங்கிக் கொண்டிருக்கும்.;தன் கழுத்தைச் சுற்றித் தொங்க விட்டிருக்கும் ஒரு பாயைத் தவிர வேறு எதையும் அவர் அணிவதில்லை’’