ஜீவா என்றால் தமிழ் மொழியில் ஈடிணையில்லாப் புலமை, கொள்கையில் அப்பழுக்கில்லாப்பற்று மேற்கொண்ட பணியில் தரம் குன்றாத் திறன், கருத்துக்களை எடுத்துச் சொல்லுவதில் நிகரற்ற துணிச்சல், கேட்டார்ப் பிணிக்கும் சொல்வன்மை, வர்க்கப் போராட்டமெனு மறக்களத்தில் அஞ்சாவீரம், மேடைகளில் கட்டுக்கடங்க அரிமாவின் கர்ச்சனை, என்று பொருள், கொள்கைக்காகச் சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்ற சில தலைவர்களுள் தோழர் ஜீவானந்தம் தலைசிறந்து விளங்கியவர். கொள்கைத் தடுமாற்றமில்லாக் காரணத்தினால் சுயமரியாதை இயக்கம் தடம் புரண்டு நீதிக் கட்சி வாய்ப் பட்டபின் துணிந்து வெளியேறியவர். இதுவே அவருக்குச் சோஷலிசத்தின் பால் இருந்த பற்றுக்குச் சான்று, பெரியார் ஈ.வெ. ராமசாமி சோவியத்நாடு சென்று மீண்ட பிறகு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்திரண்டாம் ஆண்டு டிசம்பர் திங்களில் ஈரோட்டில் சுயமரியாதைச் சமதர்மக் கட்சி உருவாயிற்று. இத்தொகுதியில் இட் பெறும் ஆவணங்களிலிருந்து அ. பொன்னம்பலனாரும் ப. ஜீவாந்தமும் அதன் செயலாளர்களாகப் பணியாற்றினர் என்று தெரிகிறது. சமதர்மத்திட்டம் தீட்டப்பட்ட பிறகுதான தமிழகத்தின் மூலை மூடுக்குகளியெல்லாம் சுயமரியாதைக் கருத்துக்கள் எதிரொலிக்கத் தொடங்கின. நாத்திகம் என்பது முரட்டுக் கும்பலின் வறட்டுக் கொள்கை என்ற நிலை மாறி, சமதர்மம் பேசியது வாயளவிலன்று, நடை முறையிலும் உண்டு என்ற நிலை உருவாயிற்று. அக்காலத்தில் மார்க்சிய லெனினிய சமதர்மக் கொள்கைகளைக் கலக்கமோ, மயக்கமோ இன்றி உறுதியாக மக்களிடையே கொண்டு சென்றவர் தோழர் ஜீவானந்தம் என்ற உண்மையினை அவர் கட்டுரைகளில் காணலாம். சுய மரியாதை இயக்கக்காலத்தில் மார்க்சிய - லெனினியத்தில் உறுதியான பிடிப்பிருந்ததனால்தான் சுயமரியாதை இயக்கத்திலிருந்து பிரிந்த பிறகு தீவிர கம்யூனிஸ்டாக - தமிழகக் கம்யூனிச இயக்கத்தின் முதல்வராக, மூலவராக அவரால் எழுச்சிபெற மூடிந்தது.