பிறகு திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் சென்று அங்குள்ள காமாட்சியையும், ஏகாம்பரையும் பாடி விட்டு சிதம்பரம், சீர்காழி, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கும் பயணம் செய்து பின்னர் திருவாரூருக்கும் சென்று அங்குள்ள தெய்வங்களின் பெயரிலும் பல உருப்படிகளை இயற்றினார்.
தீட்சிதர், சரசுவதி தெய்வத்தின் மீதான பாடல்கள் பலவற்றை இயற்றினார். சரசுவதியின் மற்ற பெயர்களான சரவதி, கலாவதி, பாரதி, கிர்வாணி மற்றும் வக்தேவி எனும் பெயர்கள் இப்பாடல்களில் காணப்படுகின்றன.[1]
தீட்சிதர் ஒரு பதவர்ணம், ஒரு தரு, ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார். பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.
சுவாமிமலை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களுக்கும் சென்று கிருதிகள் இயற்றினார். பின் திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதேஸ்வரரின் பேரில் யமுனா கல்யாணியில் "ஜம்பூபதே" (பஞ்சலிங்க கிருதி) என்ற கிருதியையும், சிறீரங்கம் ரங்கநாத ஸ்வாமியின் பேரிலும் கிருதிகள் இயற்றியுள்ளார். இவர் பல தொகுதிக் கீர்த்தனைகளையும் இயற்றினார்