மெத்தப் படித்தவர்கள் மட்டுமே படைப்புகளைப் படிப்பதால் அவர்களின் அறிவுப் பசிக்கு மட்டுமே விருந்து படைக்கப்படுகிறது. ஆனால் பாமரமக்களும் படைப்புகளைப் படித்தால்தான் சமுதாய வேரில் நல்லுணர்வு என்ற உரம் ஊட்டப்பட்டு மனிதத்தன்மை பூத்துக்குலுங்கும் காய்த்துக் கனியும். அதற்கு எழுத்துலகம் வழிதேட வேண்டும். அப்போதுதான் நச்சுப்பதிப்புகள் நசுக்கப்பட்டு, நல்ல நூல்கள் அச்சேறி, நல்ல மனித சமுதாயம் தோன்றும்.
நனி சிறந்த நூல்களுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் அந்நூலில் அடங்கியிருக்கும் கருத்துகள் விலைமிதிக்க முடியாதவை. நூல் மதிப்புரைகள் உள்ளதை உரைக்கும் தன்மையுடையவையாக இருக்க வேண்டுமே தவிர ஒரு பக்கம் சார்ந்து இருக்கக்கூடாது. பொருளுக்கேற்ற எடை காட்டுவது தராசு. நூலினுள் உரைக்கப்பட்டுள்ள பொருளை உணர்ந்து மதிப்புரை எழுதுவது விமர்சகரின் மாண்பு. அந்த வகையில் எழுத்தாளர் இரா. காமராசு அவர்கள் பல இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புகளை இந்நூலில் விமர்சனம் செய்துள்ளார். ஒரப்பார்வை பார்க்காமல் தனது நேர்கொண்ட பார்வையால் நிறைகுறைகளை எடுத்துக்காட்டுகிறார். குறுகிய வட்டத்திற்குள் புகுந்து இலக்கியக் கொபுரங்களைச் சிதைத்துவிடாமல் சீர்தூக்கியிருக்கிறார். தரம் வாய்ந்த பல இதழ்களில் வெளியான அவரது மதிப்புரைகளே இந்நூலில் இடம்பெறுகின்றன.