பாரதத்தின் புகழ், பெருமை இங்குத் தோன்றிய மகான்களாலும் சிறந்த அறிவுப் பொக்கிஷங்களாலும் பாரில் பரவியுள்ளது. மகரிஷிகளும் மகாபுருஷர்களும் அவதரித்த இந்த மண்ணில்தான் சாக்கிய வம்சத்தில் அரசாளும் உரிமையோடு அவதரித்தார் மகான் சித்தார்த்தர். ஏகபோக வாழ்வுக்கு வசதிகள் இருந்தும், எல்லை இல்லா செல்வமிருந்தும், மக்களைப் பற்றியும் அவர்களது இன்ப துன்பங்கள் பற்றியுமே சிந்தித்த சித்தார்த்தர், அதற்கு விடைகாண தன் வாழ்வையே அர்ப்பணித்து உலகம் போற்றும் புத்தரானார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற வார்த்தையை மெய்ப்பித்தது புத்தரின் வாழ்வு. அம்பினால் அடிபட்ட அன்னப் பறவையிடம் அவர் காட்டிய ஜீவகாருண்யமும், அரச வம்சத்தில் பிறந்தும் பணியாட்களோடு சரிநிகர் சமானமாய் உழவுசெய்த செயலும் அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.
ரோகிணி நதிநீர் பிரச்னைக்காக சாக்கிய வம்சத்துக்கும் கோலியர் வம்சத்துக்கும் இடையே போர் மூண்டுவிட்டால், அதனால் ஏற்படக்கூடும் உயிரிழப்புகளைத் தடுக்க, சாக்கிய சங்கத்தை எதிர்த்து சொந்தபந்தங்களையும் அரசாளும் உரிமையையும் துறந்து நாட்டைவிட்டே புத்தர் வெளியேறினார் என்ற செய்தி புத்தரைப் புதிதாகப் படிப்பவர்களுக்குப் புதிய செய்தி.
யாகம் போன்ற வைதீக கர்மாக்களால், அறியாமையின்பால் அப்பாவிகள் ஏமாற்றப்படுவதைக் கண்டு மிகவும் வருந்தி, மனித சமுதாயத்துக்கு புதிய வழியைக் காட்டினார் புத்தர். மக்களின் அறியாமை இருள் விலக புத்தர் போதித்த போதனைகள் பற்றியும் புத்த பிக்குகள் கடைப்பிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகள் நெறிமுறைகள் பற்றியும், புத்த பிக்குகள் யார், புத்த உபாசகர்கள் யார் என்பது பற்றியும் அவரவர் பின்பற்றவேண்டிய கடமைகளையும் இந்நூல் விளக்குகிறது.
ஆசையே மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படை. ஆசைகளைத் துறந்தால் துன்பமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்று போதனைகளை வழங்கியதால், அவரது பாதையில் ஏராளமான மக்கள் ஈர்க்கப்பட்டதும், அங்குலிமாலா என்ற அரக்ககுணம் கொண்டவன்கூட புத்தரின் போதனைகளால் மனம் மாறியதையும் படிக்கும்போது புத்தரின் தியான யோகத்தின் சக்தியும் அவரது போதனைகளில் பொதிந்திருந்த உண்மையும் நம்மை ஈர்க்கும்.