அன்னைத் தமிழின் அரும் பனுவல் தொல்காப்பியம். அப்பனுவல் தமிழில் உயர்கல்வி பெறுவோர்க்கே தேவையா என்ற வினாவை எழுப்பத் துணிந்தனர் சிலர் செய்தித்தாளில் இச்செய்தியைக் கண்டபோது உள்ளம் நொந்தது. அந்நேரத்தில் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சகோரர் இலக்கியச் செல்வர் திரு. குமர் அனந்தன் அவர்கள் பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் நூறாண்டுகள் நிறைந்தபோது ஐம்பத்து இரண்டு வாரங்கள் தொடர் சொற் பொழிவுகள் நிகழ்த்தித் தொண்டு செய்த நாம் அகிலம் போற்ற ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பற்றி ஏன் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தக் கூடாது என ஆர்வத்தோடு வினவினார். அதன் விளைவுதான் இலக்கியப் பேரவையின் இனிய இத்தொண்டு.