பகவத்கீதை எதைப் பற்றியது?
பகவத்கீதை பூசையைப் பற்றியதோ, வேள்வி செய்வது பற்றியதோ அன்று. சிலர் நினைப்பது போல வீட்டில் படிக்கக்கூடாத கொலை நூலோ அன்று.
இது மனநிம்மதி அடைவது பற்றியது. மனிதனுக்கே உரிய ‘தப்புத் தன்னறிவால்’ ஏற்படும் பயம், வேதனை, சோகம் முதலியவற்றை நீக்கும் நூல். கவலையிலிருந்து விடுதலை பெற்று, ‘கவலையில்லா’ மனிதனாக்கும் நூல்.
சென்ற நூற்றாண்டில், எழுபதுகளில் ‘ஹிப்பி’ என்கிற கலாச்சாரம் உண்டானது. மிருகங்கள் குளிப்பதில்லை; பல் தேய்ப்பதில்லை; ஆடை உடுத்துவதில்லை. அதனால் அவை சந்தோஷமாக இருக்கின்றன என்று ‘நவீன உளவியல்’ கண்டுபிடிப்பைச் செய்துகொண்டு ஸம்ஸாரத்திலிருந்து விடுபடும் கலாச்சாரம் தோன்றியது. தோன்றிய ஒரு சில ஆண்டுகளிலேயே அது மறைந்தும் போனது. மனிதன் தெய்வமாக வேண்டுமே ஒழிய, மிருகமாகக் கூடாது! மனிதனை இறைவனாக்கும் அறிவை பகவத்கீதை வழங்குகிறது.
பகவத்கீதையை எந்த வயதில் கற்க வேண்டும்?
பகவத்கீதை ஒரு பொழுது போக்கு நூலன்று; ஸந்நியாஸிகளுக்கான நூலுமன்று; மத ஸம்பந்தமான நூலுமன்று; இது தன்னைப் பற்றிய நூல். ஒவ்வொருவரும் எப்போது வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதே காலம் தாழ்த்தாமல், முதுமை வரட்டும் அப்போது படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் உடனே கற்க வேண்டிய நூல்.
வேதத்தின் மையக்கருத்துதான் கீதை
ஸ்ரீ ஆதி சங்கரர் பகவத்கீதைக்கு வியாக்கியானம் எழுதி யிருக்கிறார். அதில் அறிமுக உரையில் கீதையானது ‘த்விவிதோ வேதோக்த: தர்ம: ப்ரவிருத்தி லக்ஷண: நிவ்ருத்தி லக்ஷண: ச’ என்று கூறுகிறார். வேதத்தில் கூறப்பட்ட விஷயங்கள் (வேதோக்த தர்ம:) இரண்டு (த்விவிதோ). அவை இல்லற இலக்கணம் (பிரவிருத்தி லக்ஷணம்) மற்றும் துறவற இலக்கணம் (நிவ்ருத்தி லக்ஷணம்).
இல்லற இலக்கணம் அல்லது பிரவிருத்தி தர்மம் என்பது யாது காரணத்தால் மனிதனுக்கு அறிவு கொடுக்கப் பட்டதோ அந்த அறிவைப் பயன்படுத்தி, வேதத்தில் செய்யக்கூடியது என்று சொல்லப்பட்ட கர்மங்களைச் செய்து, செய்யக் கூடாதது என்று அறிவுறுத்தி நீக்கப்பட்ட கர்மங்களைத் தவிர்த்து வாழ்வது.
விதி நிஷேதனம் என்று இவ்விரண்டும் கூறப்படும். செய்யத்தக்கவை ‘விதி’, செய்யத்தகாதவை ‘நிஷேதனம்.’
மிருகங்களுக்கு விதி நிஷேதனம் கிடையாது. அவை தேர்வு இல்லாமல் சுபாவத்தில் வாழ்பவை. மனிதனுக்குத் தேர்வு இருக்கிறது. அவன் தன் செயல்களைத் தேர்வு செய்யக் கூடியவன்.
வேதத்தின் மையக்கருத்தாகிய பிரவிருத்தி, நிவ்ருத்தி முறை வாழ்க்கையில், இரண்டாவது வாழ்க்கை முறை துறவு வாழ்க்கை (நிவ்ருத்தி).
மனிதன் இல்லறத்தில் கர்மயோகத்தையும் துறவறத்தில் ஞானயோகத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே வேதத்தின் மையக்கருத்து. இக்கருத்து பகவத்கீதையின் சாரமாக இருக்கிறது.