‘சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லாமல் இருந்தது’ என்ற விவிலிய வசனமே 'ஒலிக்கவில்லை' என்ற கதையின் கரு. இதன் ஆசிரியர் ஆர்.எஸ்.ஜேக்கப்.
முத்து கை வண்டித் தொழிலாளி; அவனது மனைவி பிச்சம்மாள். வீட்டு வேலை செய்பவள். தத்தம் வேலைகளை முடித்துவிட்டு, ஓர் அச்சக வராண்டாவில் தங்கி வந்தனர். பின்னர், குளக்கரையில் சாக்குப்பைகளைக் கொண்டு ஒரு குடில் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு முதல் குழந்தை பிறக்கிறது. குளிர் தாங்க முடியாமல் அந்தக் குழந்தை இறந்து போகிறது. பிறகு, வீணாகக் கிடக்கும் செங்கற்களைப் பொறுக்கிச் சேர்த்து, சாலை ஓரத்தில் ஒரு மண் குடிசை அமைக்கின்றனர். சொந்த வீடு கட்டிய மகிழ்ச்சி நிலைக்கவில்லை. போக்குவரத்துத் துறையினர் புல்டவுசரை வைத்துக் குடிசையை அகற்றுகிறார்கள். அன்று கிறிஸ்துமஸ். பிச்சம்மாளுக்குப் பிரசவவலி தொடங்குகிறது. அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான் முத்து. மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லை. மூன்று நாள் கழித்து வரும்படி கூறுகின்றனர். கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் உள்ளே நுழைகின்றனர். ‘சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லாதிருந்தது’ என்ற வசனத்தை அடிப்படையாகக் கொண்டு குருவானவர் செய்தி அளித்துக் கொண்டிருந்தார். இந்த வசனம் வீதி எங்கும் ஒலித்த போதும், பிச்சம்மாளின் காதில் வேத வசனம் ஒலிக்கவில்லை எனக் கதையை முடிக்கிறார் ஆர்.எஸ்.ஜேக்கப்.