காத்திரமாக உணர்வுகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தும் ஸர்மிளா ஸெய்யித் தன்னில் தடுமாறும் சில புள்ளிகளைச் சில கவிதைகளில் காண்கிறோம். மரபான வைதீகப் பண்பாடு பெண்ணுக்குள் வெகு ஆழமாக, அதிலிருந்து அவள் விடுபடவே முடியாதபடி அமைந்திருப்பதைத் துயரத்துடன் சித்தரிக்கிறது ‘விழுது’ கவிதை. ‘நான் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவள்’ என முழங்கும் இவர் ‘சேலை முந்தானையைச் சரிப்படுத்துவதிலும்/ இழுத்து இழுத்து இடுப்பை மறைப்பதிலுமே /என் கரங்கள் மிகக் கவனமாயிருப்பது உணர்ந்து வியப்புதான் எனக்கு’ என்று எழுதி, எங்கணம் இது நிகழ்ந்ததென்று நம்மிடமே ஒரு கேள்வியை வைக்கிறார். இவை நிச்சயம் சிறகு முளைத்த பெண்னின் சொற்கள் அல்ல AND description='; ‘மீளாது முனகும் ஆத்மா’ கவிதையில் களவுக் கலவிக்குப் பிறகான (‘உணர்வுகள் மேலோங்கி அறிவு மயங்கி’ என்ற சொற்களின் மூலம் இது வன்கலவி அல்ல என்று உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.) ஒரு பெண்ணின் ஆத்ம விசாரம் பதிவு செய்யப்படுகிறது. பழந்தமிழ்ச் சமூகத்தில் களவுக் கலவி அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்ட ஒன்று. ஆனால் ஒருத்திக்கு ஒருவன் (ஒருவனுக்கு ஒருத்தி அல்ல) என்னும் மணவுறவுப் பாலியல் பற்றியதொரு சமூக விழுமியம், பெண்ணின் மனத்தில் ஆழமாய்க் கீறிக்கிடக்கும் இன்று, ‘விசும்பல் கேட்டு அதிர்ந்தேன்/கழுவப்படாத ஆத்மா மீளாமல்/முனகிக்கொண்டிருந்தது இன்னும்’ என்று எழுதுகிறார். இக்கவிதையின் தொடர்ச்சியாக ‘இரவும் காற்றும் நானும்’ மற்றும் ‘சரீரமற்றவள்’ கவிதைகளை வாசிக்கலாம். முந்தையது, அடர்ந்த அனுபவங்களின் வழியாகப் பெருந்துக்கம் சூழ்ந்ததொரு வெற்றிடத்தை மனிதன்/மனுஷி அடைவதை அற்புதமாகக் கவிதைப்படுத்துகிறது என்றால், பிந்தையது, சரீரத்தைக் களைந்தெறிவது குறித்த பகீரத முயற்சியில் ஈடுபடுகிறது. முழுமுற்றான ஆன்மீக விடுதலையை யாசிக்கும் ‘சரீரமற்றவள்’ கவிதையைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒரு நூற்றாண்டில் காதலில் உழன்று கிடந்த தமிழ்மனம் பிறிதொரு நூற்றாண்டில் சித்தர் காலத்தை எட்ட முடிந்தது இப்படியானதொரு தருணத்தின் நீட்சியில்தான். தி. ஜானகிராமனின் மோகமுள் புவனா ‘இதற்குத்தானா?’ என்று கேட்ட கேள்வியை, வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில், எல்லா வகையான ஆண்களும் பெண்களும் சந்திக்க வேண்டிய தருணம் காத்துக்கொண்டேதான் இருக்கிறது. ‘பசுமை ரகசியங்கள்’ கவிதையில் அவளது காமத்தை அதன் ‘ஆழத்தில் அவனது மழை நனைக்காமலே’ திரும்புகிறபோது, தன் மனத்தைத் தேற்றிக்கொள்ளும் அவளால் ‘காமமற்ற பசுமை ரகசியங்களுடன்/ஆதியிலிருந்து காதலிப்போம்’ என்று கூற முடிகிறது. ஸர்மிளா ஸெய்யித், தன் கவிதைக் கப்பலை இன்னும் ஆழமான கடற்பகுதியில் செலுத்து வதற்கான சாத்தியங்கள் தாரளமாகத் தென்படுகின்றன சிறகு முளைத்த பெண் தொகுதியில்.