ஆனந்தப் பரவசத்தில் ரசிகர்களை மூழ்கடிக்கச் செய்யும் இறுதி நிகழ்வுதான் தில்லானா தில்லானாவின் கோர்வைகளில் ரசிகர்களின் மனதைக் கோர்த்து வாங்கி விடும் அற்புதத் திறம் பத்மாவிற்குக் கைவந்த கலை. அவரால் மேடையில் எதுவாக வேண்டுமானாலும் ஆகிவிட முடியும். ஒரு பூவாய்... ஒரு வண்ணத்துப் பூச்சியாய்.மீனாய்.. மானாய்... புலியாய்... யானையாய்... யானைப் பாகனாய்... சேயாய்... தாயாய்... என்று சொல்லிக் கொண்டே போகலாம். இல்லாத ஊஞ்சலை, இருப்பதாக பாவித்து ஊஞ்சல் ஆடுவதைப் போலவே உடலசைவிலேயே உயரே போவதும் பின் உயரம் குறைந்து, தாழ்ந்து கீழே வருவதும் பின் மீண்டும் உடலை நிமிர்த்தி மேலே போவதும் ஓ! நாமும் அல்லவா ஊஞ்சலில் ஆட்டப்படுகிறோம். அப்படி ஒரு அற்புத சித்தரிப்பை அவரால் மட்டுமே செய்ய முடிகிறது. ஜமுனா பத்மாவின் அரங்கம் ஆக்ரமித்த அசைவுகளில் கட்டுண்டு கிடந்தாள். நேரம் போனதே தெரியவில்லை... 'சுரீர்' என்று ஒரு உணர்வு உள்ளங்கையில் உற்பத்தி யாகி, கை கடிகாரம் பார்த்தாள். துடித்துப் போனாள். முன் நெற்றியில் வேர்வை முத்துக்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டன. நெஞ்சத்தின் படபடப்பு கட்டு மீறியது. ஒன்பது மணி ஆகிவிட்டிருந்தது!