'என்னடா ஜீப்பிலா போகப் போகிறோம்?" என்றான் சத்யா வியப்புடன். ''சேச்சே! சென்ட்ரல் வரைதான் ஜீப். இரயிலில் சேலம் போனதும் அங்கு நம்மை பிக்அப் பண்ண டிபார்ட்மென்ட் ஆட்கள் வருவார்கள்." பெட்டிகளை உள்ளே வைத்து விட்டு இருவரும் ஷாலினியிடம் வந்தார்கள். அன்புடன் தங்கையின் தலையை வருடிய ராம்குமார் "நல்லா படிக்கணும் ஷாலினி. பத்திரமா இரு. அம்மா அப்பாவுக்கு தொல்லை கொடுக்காதே. தினமும் போன் செய்கிறேன். அங்கு போன பிறகு என் வேலை, தங்கும் வசதியெல்லாம் பார்த்துக் கொண்டு சொல்கிறேன். நீ விடுமுறையில் வரலாம்" என்றான். ஷாலினி கலகலவெனச் சிரித்தாள். "அண்ணா எல்.கே.ஜி குழந்தைக்கு சொல்கிற மாதிரி சொல்றியே! நான் காலேஜ் போகிறேன். நினைவிருக்கிறதா உனக்கு?” "காலேஜ் போனாலும், கல்யாணமே ஆனாலும் கூட நீ எனக்கு குழந்தைதான்" என்ற ராம்குமார் "சரி வந்து வண்டியில் ஏறு. உன்னை வீட்டில் விட்டு விட்டு நாங்கள் போகிறோம்" என்றான் தங்கையிடம். ஷாலினி அண்ணன் அருகே நின்றிருந்த சத்யாவைப் பார்க்கவும் அவன் அவளை கவனிக்காமல் ராம்குமாருடன் சென்று ஜீப்பில் ஏறினான். தங்கை நின்ற இடத்திலேயே நிற்பதைப் பார்த்த ராம்குமார் "சீக்கிரம் வா ஷாலினி. எங்களுக்கு இரயிலுக்கு நேரமாச்சு" என்றான், அவளிடம். ஷாலினி ஜீப்பில் ஏறி அவர்கள் எதிரே அமர்ந்தாள். வழியெல்லாம் ராம்குமார் ஏதோ பேசியபடியே வந்தான்.