எந்த ஒரு செயலையும், எப்படி, எங்கே, எந்தக் காலகட்டத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிடுவது அவசியம். அது இயல்பாக அமைய வேண்டிய ஒரு கலை. அந்தக் கலையைத்தான் அலுவலக ரீதியில் ‘நிர்வாகம்’ என்கிறோம். தலைமை, பொதுமக்களின் கருத்து, சந்தை நிலவரம், புதிய கண்டுபிடிப்பு... போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்தது நிர்வாக உலகம். நீங்கள் பணிபுரியும் நிறுவனம், உங்கள் கருத்து, உங்கள் வேலையை உங்கள் மேலதிகாரி எடைபோடும் விதம், உங்களிடம் சீனியர்கள் காணும் திறமை, பரந்த பொருளாதாரம் தரும் வாய்ப்புகள் இவை எல்லாமே உங்கள் கேரியரில் தாக்கத்தை உண்டாக்குபவை. இதை நீங்கள் அறிந்திருந்தால், சரியான பணிகளை மட்டுமின்றி, சரியான விதத்திலும் உங்கள் பணிகளைச் செய்து முடிக்கலாம். தனக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை என்றும், வெளியே உயர்ந்த பதவிகள் தனக்காகக் காத்திருப்பதாக தப்புக்கணக்கு போட்டு வேலையை ராஜினாமா செய்த ராம், பல இன்னல்களைச் சந்தித்து, குறைந்த சம்பளத்தில் வேறு ஒரு வேலையில் சேர்ந்த பிறகு தனது சுபாவத்தை மாற்றிக்கொண்ட அனுபவத்தையும், ஒரு நிறுவனத்தில் முதலீட்டுப் பிரிவில் பணியில் இருந்த பிரவீனா, செலவு செய்யும் வேகத்தைக் குறைத்ததால், தன் கேரியர் பாதிக்கப்பட்டு இருந்தாலும்கூட, பல கோடி ரூபாய்களை நிறுவனம் சேமித்து வைக்க தான் காரணமாக இருந்த அனுபவத்தையும் கண்முன்னே நிறுத்துகிறது இந்த நூல். ‘When the Penny Drops’ என்கிற ஆங்கில நூலை, எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சாருகேசி. மனிதர்களின் நிர்வாகப் பண்புகளை, அனுபவ உதாரணங்களாகக் கோத்து, விரிவாகச் சொல்லியிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு!