'திருமணமான என் தோழிக்கு..' நாவல் அல்ல!
கட்டுரை. இந்திய துணைக்கண்டத்தில் திருமணம் என்றால் என்ன என்பதையும்,
பந்தத்தில் இணைந்த பெண்கள் ஆசுவாசபடுத்தி கொள்வதையும் கூறும் கட்டுரை
கையேடு. நான்கு விதமான குடும்பங்கள். அந்த குடும்பங்களில் ஏற்படும்
சிக்கல்கள். அதைக் குறித்து பொதுவாக வைத்துக் கொள்ள வேண்டிய கவனம், தெளிவு
பற்றி அவருக்கே உரிய பாணியில் சொல்கிறார். ""வெற்றி போதும் என்று
தோன்றியவர்கள், வெற்றி பெற்றவர்கள் என்று விலகியவர்கள் சமுதாயத்தின் மிகப்
பெரிய விஷவிருட்சங்கள். அவர்கள் தானும் வளர்வதில்லை. மற்றவர்களையும்
வளரவிடாதவர்கள். அதிகமிருப்பாதால்தான் மிகப் பெரிய பிரச்சனையாக வாழ்க்கை
இருக்கிறது. மற்றவர்களுடைய வெற்றியைப்பற்றி குமுறுகிறவர்கள்தான் இந்த
தேசத்தில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் சோம்பேறிகளாகவும்
இருக்கிறார்கள். அந்த சோம்பேறிகள் தானும் ஜெயிக்காது, மற்றவர்களையும்
ஜெயிக்கவிடாது ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவைகளை அப்புறப்படுத்தினால்
இந்த தேசம் நன்றாக இருக்கும்."
"வீட்டுச்
சண்டைகளை மறக்க சினிமாவுக்கோ, நாடகத்திற்கோ செல்பவன் முட்டாள். அவன்
வீட்டுக் கூச்சலை மறக்க இன்னொரு கூச்சலுக்குப் போகிறானே தவிர தனிமையில்
தன்னுடைய பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாதவனாகவே போய்
விடுகிறான். தன் பிரச்சினை என்ன என்று சொல்லமுடியாதவன் பிறர் மீது ஆளுமை
செலுத்துவது என்பது என்ன. அடித்து உதைத்தலா, அகங்காரத்துடனும்,
ஆத்திரத்துடனும் பேசுவதா, இல்லை. அவர் சொன்னால் மற்றவர்கள் கேட்க வேண்டும்,
இவன் சொன்னால் அதில் அர்த்தமிருக்கும் என்று மற்றவர் காது கொடுக்க
வேண்டும். அதற்கு பெயர்தான் ஆளுமை. அந்த ஆளுமை உன்னிடம் இருக்கிறதா. நீ
சொன்னால் காது கொடுத்துக் கேட்கிறார்களா ஏன் கேட்க வில்லை. உனக்கே உன்னைப்
பற்றி புரியவில்லை."
"பயணம்
மேற்கொள்ளுகிறபோது வாழ்க்கையின் நிலையாமை ஒரு மனிதனுக்கு புரிகிறது. பயணம்
மேற்கொள்ளுகிறபோது உலகத்தினுடைய பிரமாண்டம் புரிகிறது. பயணம்
மேற்கொள்கிறபொழுது எத்தனை விதமான மக்கள், எத்தனை விதமான வாழ்க்கை, எத்தனை
விதமான முயற்சிகள், எத்தனை விதமான தோல்விகள், எத்தனை விதமான வெற்றிகள்
என்பது தெரிந்து போகின்றன. நல்லதும், கெட்டதும் முகத்திற்கு நேரே வந்து
பயணத்தின்போது ஓடுகின்றன. நம்முடைய பிரச்சனை ஒன்றுமே இல்லை. நம்மைவிட
வேதனைப்படுகிறவர்கள் அதிகம் என்பதும் புரிந்து போகிறது. பூமியின் பரப்பு
புரியப் புரியதான் தூசினும் தூசாக இருப்பது தெரிந்து விடுகிறது. ஒரு தூசு
இன்னொரு தூசோடு சண்டைப்போடுவதற்கு என்ன இருக்கிறது. என்ன காரணம் இருக்கிறது
என்ற தெளிவு வருகிறது."