’சிலோன்’ தொகுப்பில் உள்ள கதைகள் படரும் இடங்களும் மனிதர்களும் ஏறக்குறைய அரை நூற்றாண்டாய் என் மனதில் மாறாமல் கனன்று கொண்டிருப்பவை. மலையகம் சார்ந்த கதைகள் முப்பதுகள் தொடங்கி இன்று வரை வந்து கொண்டுதானிருக்கின்றன. இருப்பினும் இம்மனிதர்கள் குறித்து வந்த படைப்புகளில் பெரும்பாலானவை மலையக மண்ணிலிருந்தே எழுதப்பட்டவை அல்லது அங்கிருந்து தாயகம் திரும்பியவர்களால் எழுதப்பட்டவை. தமிழ்நாட்டின் படைப்பாளிகளில் இவர்களது துயர வாழ்வைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர்கள் புதுமைப்பித்தன் போன்ற வெகு சில படைப்பாளிகளே. அந்த வகையில் தோழர் பிரசாந்தின் ‘சிலோன்’ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது.
நம்முன்னே நிழலாடும் இக்கதைகளில் வடக்குக் கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்டு இன அழிப்புக்கு ஆளாகி நிற்கும் ஈழத்தமிழரும் உண்டு. பதுளை, நுவரேலியா உள்ளிட்ட மலையகப் பகுதிகளின் தோட்டங்களில் அல்லலுறும் மலையக மக்களும் உண்டு. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தங்களால் தமிழ்நாட்டிற்குப் பந்தாடப்பட்ட தாயகம் திரும்பியோரும் உண்டு.
இவர்களை... இவர்களது வாழ்வை... இவர்களது எளிமையை... இவர்களது தீரத்தை... இவர்களது இயலாமையை... என இவர்களைச் சுற்றிச் சுற்றி வளைய வரும் கதைகளே இதில் பெரும்பாலானவை. இவை அனைத்தும் கதைகளா என்றால், இல்லையென்று அடித்துச் சொல்லலாம். உண்மையில் இவை கண்முன்னே நிற்கும் வரலாற்றுச் சாட்சியங்கள்.
பிரசாந்தின் ‘காடரும், ஆனைமலையும்’ ஓர் உலகத்தைக் காட்டியதென்றால், இத்தொகுப்போ நம்மை வேறொரு உலகுக்குக் கூட்டிச் செல்கிறது.
- பாமரன்