மார்பகப் புற்றுநோயை பெண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று ஆராய்ந்தால், சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இது வெறும் உடல் நோயாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. உடல்சார்ந்த ஏதோவொரு அவமானத்தையும் சேர்ந்து அவர்கள் சுமக்கிறார்கள். எனக்குத் தெரிந்த 3 பெண்மணிகள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தாரிடம் சொல்லாமல் மறைத்து, முற்றிய நிலையில் மருத்துவமனைக்குப் போய், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போயிருக்கிறார்கள். ஒரு பெண்மணி கணவரிடம் சொன்னாலும், சிகிச்சைக்கு மருத்துவமனைக்குப் போக உறுதியாக மறுத்துவிட்டார். காரணம் கேட்டபோது, தனது மார்பகத்தை வெளியாரிடம், அவர் மருத்துவராகவே இருந்தாலும் காட்டமுடியாது என்றும், ஒருவேளை மருத்துவர் மார்பகத்தை அறுவை சிகிச்சையால் அகற்றச் சொன்னால் அதை செய்ய முடியாது என்றும் உறுதியாக மறுத்துவிட்டார். குடும்பத்தாரின் எந்த வாதமும் எடுபடாமல், நோய் முற்றி அவர் இறந்ததை மட்டுமே அவர்கள் கையறுநிலையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒருவகையில், மார்பகம் என்பது ‘கற்பு’ என்ற கருத்தாக்கத்துடன் தொடர்புடைய விஷயமாக இங்கு பார்க்கப்படுகிறது. மார்பகத்தில் ஏதேனும் கட்டியோ, பிரச்சினையோ வந்தால் அதை வெளியில் சொல்வதைப் பல பெண்கள் அவமானமாகவும் வெட்கமாகவும் உணர்கிறார்கள். இன்றும் இந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை என்பது சோகம்தான். இத்தகைய சூழ்நிலையில், ‘புற்றிலிருந்து உயிர்த்தல்’ என்ற நூலை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு, வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார் பெண்ணியலாளரும், கல்வியாளருமான சாலை செல்வம் அவர்கள். அவர் தனது சிகிச்சை அனுபவத்தை இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார்.