சாதத் ஹசன் மண்ட்டோ... ஒரு முறை உச்சரித்த பின்னால் இந்தப் பெயரில் வசீகரம் தொடர்ந்து எவரையும் ஆட்கொண்டுவிடும் சாதுர்யம் கொண்டது. அதேபோல் மண்ட்டோவின் கதைவெளியும்கூட, வாசிப்பவரின் மனதிலிருந்து சீக்கிரத்தில் மறக்கும் தன்மையற்றது, முதல் முதலாக நான் மண்ட்டோவின் கதைவெளியைக் கண்டடைந்த தருணம் இன்னும் என் ஞாபக அடுக்கில் மறையாமல் புனைவின் மாய யதார்த்த கனவுபோல அடிக்கடி கிளர்ந்துகொண்டேயிருக்கிறது.