சமகாலத்தில் வாசிக்க வாய்த்த நாவல்களில் மனம் கவர்ந்தது இது. இளம்
நாவலாசிரியரான வேல்முருகன் இளங்கோ தன் திறன் உரைத்து நில்லாமல், நாவலை
வளர்த்துச் செல்வதில் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார். தமிழில் ஓர் இளைய
திறன்மிக்க படைப்பாளி, நம்பிக்கை தரும் நாவலாசிரியர் எனும் நிலையெல்லாம்
கடந்து, தேர்ந்த நாவலாசிரியர் வரிசையில் வைப்பேன் வேல்முருகன் இளங்கோவை.
எப்பகுதியிலும், எந்த உறவிலும் எச்சம்பவத்திலும் செயற்கைத்தனம் அற்ற,
புனைவென்று உணர்த்தாத விதத்தில் இவர் படைப்பு பேசுகிறது. அரை
நூற்றாண்டுக்கும் மேலாகப் புனைவிலக்கியம் வாசிப்பவன் என்பதால் காலந்தோறும்
பன்முகப்பட்ட எழுத்தாளுமைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறேன். புத்தம் புதிய,
படைப்பூக்கமுள்ள, சொல் திறனில் நவீனமுள்ள, மொழித் தேர்ச்சியுள்ள இளைய
நாவலாசிரியர் ஒருவர் ‘மன்னார் பொழுதுகள்’ மூலம் அறிமுகம் ஆனதில் களிப்பு
உண்டு எமக்கு.