ஏற்படுத்தப்படுவது எல்லாமும் இயல்பாவதில்லை. நதிக்கு கரை ஏற்படுத்தியவர்களுக்கு கரை தாண்டல் மீறல், நதிக்கு கரையே மீறல்! இழப்பும் இழந்துவிடக் கூடாதென்ற பதைப்பும் கண்ணாடியைப் போல் தெளிந்து சலசலத்து ஓடும் நீர்நிலையின் கீழ் கூழாங்கற்களிடையே தெரியும் மீன் மேலெழுவது போல எண்ணமாக எழுந்து கொண்டிருக்கும். தினசரி வாழ்வில் சிரத்தை கொள்ளத் தவறிய சுவாரசியங்களும் உறவுப் பாதைகளும் சிக்கலும் மனப் பரிதவிப்பும் பாத்திரங்களின் கோணங்களாக விரியும் கதைகள். நிறைந்து கொள்ள விரும்பும் மனதின் நீட்சியை கோடுகளுக்குள் சிறைப்படுத்தாத நாவலின் பரப்பைக் கொண்ட ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு.