சத்யவதியின் கதைகள் தற்கால நவீன தெலுங்கு மண்ணின் கலாச்சார
நிலப்பரப்பையும் அங்கு வாழும் பெண்களின் வாழ்க்கைச் சூழலையும் பேசுகிறது.
நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் அன்றாடங்களையும் அவர்களது துயரத்தையும்
மெல்லிய குரலில் நகைச்சுவை உணர்வுடன் இக்கதைகள் கையாள்கின்றன. அலுவலக வேலை
முடிந்த பிறகு வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அவசரமாக வீடு திரும்பும் பெண்,
குடும்பத் தேவைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தன் பெயரையே
மறந்துவிட்ட பெண் போன்ற கதாபாத்திரங்களை இக்கதைகளின் மூலமாக அறிய
முடிகிறது. கணவன் மனைவி இருவருக்கிடையே உருவாகும் கருத்து முரண்களைப்
பாரம்பரியம், அறியாமை, அசட்டுத்தனம், துணிச்சல், நம்பிக்கை, பொறுமை,
விவேகம் ஆகியவற்றால் பெண்கள் எதிர்கொள்வதை, அதிலிருந்து மீண்டு வாழும்
வாழ்வை இக்கதைகள் பேசுகின்றன. பெண்கள் தங்களுடைய இருப்பை
நிலைநிறுத்திக்கொள்ள முனையும் தருணங்கள் பிரச்சாரம் ஆகாமல் கலைத்தன்மையோடு
வெளிப்பட்டிருப்பது இக்கதைகளின் சிறப்பாகும். தமிழில் அசோகமித்திரனின் கதை
உலகத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய கதைகளும் பாத்திரங்களும் சத்யவதியின்
கதைகளில் அமையப்பெற்றுள்ளன.