இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது, சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின, துறவறம் ஆகிய காரண வகையான் கூறப்படுவதல்லது இலக்கண வகையான் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே ஆம்.