'மனம் போல வாழ்வு' என்பார்கள். சிந்தனையில் தெளிவும் புதுமையில் வேகமும் கொண்டோருக்கு இந்த உலகம் சுலபமாக வசப்படும். எல்லா சவால்களையும் வெற்றி கொள்வதற்கு எளிய இயந்திரமாக உடனிருந்து உதவுவது நமது தெளிவான மனமே. அத்தகைய மனத்தின் சிந்தனைகள் பாசி படிந்த குளம் போல தெளிவற்ற நிலையை அடையும் போதெல்லாம் வெளியிலிருந்து ஒரு நல்லாசிரியனின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. உற்ற துணையாக உரிய நேரத்தில் கிடைக்கும் அறிவுரை, மனத்தில் எழும் சலனங்களைப் போக்கி அதை பளிங்குத் தடாகமாக மாற்றுகிறது. பட்டறிவிலும் படிப்பறிவிலும் தேர்ந்து, பெரியோர் பலரின் நட்போடு பக்குவப்பட்டு, செம்மையான சொல்திறனும் எழுத்துத்திறனும் வாய்க்கப் பெற்ற கவிஞர் பெருமாள்ராசு, 'மாத்தி யோசி!'யை வழிகாட்டுதல் தொடராக விகடனில் எழுதியபோது பெரும் வரவேற்பு கிட்டியது. நறுக்குத் தெறித்தாற் போன்ற எழுத்துக்களில், அந்தத் தொடர் விகடனில் வெளியான போது அதற்குக் கிடைத்த வரவேற்பு நாங்கள் எதிர்பார்த்ததே. வாராவாரம் விகடனில் சிதறிய முத்துக்களுடன் கவிஞரின் சிந்தனையில் மேலும் பூத்த மாணிக்கங்களையும் சரமாகக் கோத்து உங்கள் கரங்களில் சேர்ப்பிக்கிறோம் _ பெருமிதத்தோடு. நீங்களும் படித்துப் பாருங்கள். சிந்தனை செம்மையாகும்... வாழ்க்கை வசப்படும்.