சமுதாயத்தில் புனிதமாக கட்டமைக்கப் பட்டவைகளையோ, பொதுவெளியில் பேசத் தயங்குபவைகளையோ பேசுபொருளாக எடுத்துக் கொண்டு அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ நகைமுரணுடன் இழித்துரைத்து அதற்கானத் தீர்வை முன்வைப்பதே 'அங்கதம்'. விரும்பத்தகாத ஒன்றை பகடி செய்து அதே நேரத்தில் அதன் விளைவுகளை உணர வைத்து இடித்துரைக்கும் ஓர் இலக்கிய வடிவம். தமிழிலக்கியத்தின் அனைத்துக் காலகட்டங்களிலும் அங்கதத்திற்கான பெரும் பஞ்சம் நிலவிக் கொண்டே தான் இருந்து வந்திருக்கிறது. சமகாலத்தில் அதைத் தீர்த்து வைத்து அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் பிரபு தர்மராஜ்.