கோணங்கியின் பள்ளியைச் சேர்ந்தவர் மதிஅழகன். சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் தற்காலச்சூழலிலும் சிறுபத்திரிகை மரபின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருக்கும் இவர் கல்குதிரையின் மூலம் உருவாகி வந்தவர். யதார்த்த வாழ்வை முற்றிலும் மறுதலித்து இவருடைய கதைகள் யாவும் மாய-யதார்த்த வகைமையில் அமைந்திருக்கின்றன. மதிஅழகனின் கதைகளுக்குள் சேதனங்களும் அசேதனங்களும் ஒன்றுகலந்து முயங்கிப் பல்வேறு வடிவங்களைக் கைக்கொள்வதன் மூலம் புனைவிலும் மொழியிலும் புதிய சாத்தியங்களை முயற்சித்துப் பார்க்கின்றன. இந்தக் கதைகளின் வடிவம் அனேகமும் மேற்கத்தைய சாயலைக் கொண்டிருந்தாலும் அதனூடாக இயங்கும் எழுத்தாளனின் ஆன்மா தமிழ்நிலத்தில் வேரூன்றியிருப்பதை நம்மால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.