நம் மூடப்பழக்க வழக்கம் என்று சந்தேகமற நன்றுயறிந்த ஒரு சிறு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமானாலும் நடுங்குகின்றோம். தைரியமாய் ஏதாவது செய்வதாயிருந்தால் அதை சாமியும், மதமும்,ஸ்மிருதியும், புராணமும் வந்து தடைக் கல்லாய் நிறுத்திவிடுகின்றது. இவைகளையெல்லாம் கூட ஒரு விதத்தில் சமாளித்துவிடலாம். ஆனாலும் பெரியவர்கள் நடந்த வழி என்கின்ற பொறுப்பற்றதும் அர்த்தமற்றதுமான தடை பெரிய தடையாய் இருக்கின்றது. எனவே இவ்விஷயத்தில் சிறிதும் தாக்ஷண்ணியமில்லாததும் தயங்காததுமான அழிவு வேலையே மிகவும் தேவையானது என்று மறுபடியும் மறுபடியும் சொல்லுவேன்.