சுதந்திர தமிழ் ஈழம் வேண்டி, இறுதிகட்ட போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களையும், நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளையும் கொன்று குவித்த சிங்களப்படை, சுமார் மூன்றரை லட்சம் தமிழர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அடைத்து வைத்திருப்பதை பல்வேறு புகைப்பட, வீடியோ ஆதாரமாகக் கண்டு ரத்தக்கண்ணீர் வடித்தனர் உலகத் தமிழர்கள். முகாம்களில் அடைந்து கிடந்த தமிழர்களை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், முதல் வெற்றிகரமான முயற்சியாக இலங்கைக்குச் சென்ற தமிழக எம்.பி_க்கள் குழுவின் பயணத்தைத்தான் சொல்ல வேண்டும். இந்தக் குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இடம்பெற்றதே பல்வேறு சூடான விமரிசனங்களைக் கிளப்பியது. ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவரை இந்திய மற்றும் இலங்கை அரசு எப்படி அனுமதித்தது... அவரால் பிரச்னைகள் ஏற்பட்டுவிடாதா?’ என சலசலப்புகள் எழுந்தன. ஆனால், அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் விதமாக அமைந்துவிட்டது அவர் ஜூனியர் விகடன் இதழ்களில் எழுதிய 'முள்வலி...' பயணக் கட்டுரை! அதன் தொகுப்பே இந்த நூல். இலங்கை பிரச்னையில் அவருடைய மனவேதனை, கோபம், எதிர்பார்ப்புகள் அத்தனையும் தீப்பிடிக்கும் வார்த்தைகளில் கொட்டித் தீர்த்திருக்கிறார் திருமாவளவன். ஒவ்வொரு தமிழனையும் பேனா முனையின் உதவியால், இலங்கை அகதி முகாமுக்கு நேரிலேயே அழைத்துச் சென்று கண்ணீர் சிந்த வைத்துவிட்டார். இலங்கையில் வதைபடும் பரிதாபத் தமிழனுக்கு விடிவு ஒருநாள் கிடைத்தே தீரவேண்டும் என்ற உத்வேகத்தையும் இந்த எழுத்து உங்களுக்குள் ஏற்படுத்தும்!