விவரம் தெரிந்த நாறிலிருந்தே கண்ணில்படும் எந்தப் புத்தகத்தையும், புரிகிறதோ இல்லையோ முழுதாகப் புரட்டிப் பார்த்துவிடும் பழக்கம் எனக்கிருந்தது,ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன் வேலூரில் ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து கணையாழி, தீபம் இதழ்களை சொற்பவிலைக்கு மொத்தமாக அள்ளி வந்தபோது புதையலெடுத்தவனின் பரவசத்திலிருந்தேன்.பல புதிய திசைகளையும், மாறுபட்ட சுவைகளையும் எனக்கு அறிமுகப்படுத்திய அவ்விதழ்களை ஒரே மூச்சாகப படித்து முடித்த போது, அதில் வந்திருந்த கவிதைகளைப் போலவே என்னாலும் எழுத முடியும் என்ற தன்நிச்சயம் பிறந்தது. முதல் தொகுப்பிலுள்ள கவிதைகளில் தென்பட்ட முன்னோடிகளின் சாயல்களையும் பாதிப்புகளையும் கடந்து பிற்பகுதி கவிதைகளில் எழுதுவதற்கென்று எனக்கானதோரு வழியையும், சுயமான மொழியையும் கண்டடைந்திருப்பதாகவே நம்புகிறேன்.