இன்றைய நவநாகரிக நங்கையரில் பலர் ‘சமையல் என்றாலே சங்கடமான சங்கதி’ என்று வெகு தூரம் ஓடுகிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதையே கலையார்வத்துடன் கற்றுக்கொண்டு, சமைத்து அனைவரையும் அசத்தவும் செய்கிறார்கள். வெவ்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று வேலைபார்க்கும் பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் சமைத்துச் சாப்பிடுவதே உடலுக்கு உகந்தது. பர்ஸையும் உடலையும் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி நாமே சமைத்துவிடுவதுதான். கண்டதைப் போட்டு வெந்ததைத் திண்பதைவிட, முறையாகக் கற்று கச்சிதமாக சமைத்து உண்பதும் உபசரிப்பதும், மற்றவரையும் மகிழ்வித்து நாமும் மகிழ வழிவகுக்கும். சமையல் கலையின் அரிச்சுவடிகூட தெரியாதவர்களும், அற்புதமான சமையல் வகைகளை இந்த நூலின் உதவியோடு கற்றுக் கொள்ளலாம். எல்லா சமையல் நூல்களையும் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான முயற்சியாக, உணவின் தன்மையையும் அவற்றால் உடலுக்கு உண்டாகும் பயன்களையும், அவற்றில் அடங்கியுள்ள சத்துகளையும் விரிவாக விளக்கி ஆரோக்கியத்துக்கு வழி காட்டியுள்ளார் நூலாசிரியர் சாந்தா ஜெயராஜ். நாவில் நீரூரவைக்கும் வண்ணமயமான புகைப்படங்களோடு, உணவு சமைக்கும் முறைகளையும், உணவு வகைகளை வகைப்படுத்தியும் கொடுத்திருப்பதோடு, சமையலறை பராமரிப்பு மற்றும் அங்கு இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களையும் இந்த நூலில் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது இளம் தலைமுறையினருக்கு மிகவும் பயன்படும்.