முன்பெல்லாம்,
கிராமப்புறங்களில் மாட்டு வண்டி நிறைய மண்பாண்டங்களை அள்ளிக்கட்டிக்கொண்டு
வந்து ஊர் ஊராக விற்பனை செய்வார்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள். தேர்
அசைந்து வருவதுபோல மெதுவாக வரும் அந்த மாட்டுவண்டி. வீட்டுக்கு வீடு
நிறுத்தி, உப்பு, புளி, நெல், தானியங்கள் கொடுத்து மண் பாத்திரங்களை
வாங்குவார்கள் மக்கள். கண்டறிய முடியாத சிறு சிறு ஓட்டைகளைக்கூட,
தட்டிப்பார்த்து ஓசையை வைத்தே கண்டுபிடித்துவிடுவார்கள் இல்லத்தரசிகள். மண்பாண்டம் பற்றி சித்தமருத்துவம் நிறைய பேசுகிறது. “மண்பாண்டத்தில்
சமைக்கப்படும் உணவுகளில் செரிமானத்தன்மை மிகுந்திருக்கும். தவிர, பிற
பாத்திர வகைகளில் சமைக்கும்போது ஏற்படும் தீமைகள் இதில் இருக்காது”
என்கிறது சித்த மருத்துவம். உடல்சூட்டை சமநிலைப்படுத்தும் ஆற்றலும்
மண்பானையில் ஊறிய தண்ணீருக்கு உண்டாம். மாரடைப்பு, சர்க்கரை என,
தொற்றாநோய்கள் மனித குலத்தை வதைத்துக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்
மண்பானைச் சமையலை ‘தீமாக’க் கொண்டு நிறைய உணவகங்கள் உருவாகியிருக்கின்றன.
அப்படியொரு உணவகம்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை சாலையில் இருக்கும்
‘ஹாட் பாட்’ உணவகம்.