மனிதனைப் போலவே புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும்; “எழுத்தாளனுக்கு அலாதியான நுண்ணியப் பார்வை வேண்டும். மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை நுணுக்கமாகப் பார்த்துக் குறித்துக் கொள்ளும் திறன் வேண்டும். கச்சிதமான வளமான நடைவேண்டும். கூர்மையாகக் கவனிக்கும் கண்களும், ஒருமைப்பாடுகளையும் ஆழ்ந்து கவனித்தறியும் ஆற்றலும், இடையறாத முடிவில்லாத பயிற்சியும் இருந்தால்தான் மாதிரிப் படைப்புகளாக உள்ள மனிதர்களைப் பற்றி பளிச்சென சித்தரித்துத் தர முடியும்.” என்று மாக்சிம் கார்க்கி எழுத்துப்பற்றி எடுத்துரைப்பார். அப்படித்தான், சமூகத்தில் புலப்படும் புறக்கூறுகளைக் கண்ணுற்று, அதை தன் அகத்தில் அடைக்காத்து, உயிர்ப்பான படைப்பாக வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். எழுத்து என்பது சமூகத்தின் சாளரங்களை ஓசையோடு திறக்கிற விடுதலைத் திறவுகளாக வேண்டும். எனது எழுத்தும் அத் திறவுகோல் தயாரிக்கும் சிறு துரும்பாக இருக்கும் என நம்புகிறேன்.