விடுதலையை நோக்கி விரிந்து செல்லும் எமது போராட்ட வரலாற்றின் அம்சமான போர்க்களப் பதிவுகளை எமது போராளிகளிற் பலர் பதிவுசெய்தும் வெளிப்படுத்தியும் வருகிறார்கள். இது மகிழ்ச்சிக்குரியது. பாராட்டுதலுக்குரியது. கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி, மேஜர் பாரதி, கப்டன் மலரவன், லெப் கேணல் பாவரசன், மேஜர் பகலவன் எனப்பலர் இந்தப்பங்களிப்பிலும் அரிய போராட்டப் பணியிலும் செயற்பட்டு, எமது போராட்ட வரலாற்றுக்குப் பெருமைசேர்த்திருக்கின்றனர். இத்தகைய தொடர்ச்சியான வெளிப்பாட்டுப் பங்களிப்பில் மருத்துவத்துறையைச் சேர்ந்த திரு.தூயவன் அவர்கள் இப்போது தன்னுடைய பணியை ஒரு நூலாக முன்வைத்திருக்கின்றார். எமது தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து, அதன் செல்நெறியில் சந்தித்த சுமைகளை தோளில்சுமந்து, தாயகத்தை துண்டாட வந்தபகையை களத்திடை சந்தித்த வேளைகளில் விழுப்புண்களை ஏற்று நிற்கும் எமது போராளிச் செல்வங்களை தம் மடியில் தாங்கி அவர்களை காலனின் கையிலிருந்து காப்பாற்றும் பணியில் எமது மருத்துவப்போராளிகளே சவால்களைச் சந்தித்து மருத்துவ ரீதியாக வேதனைகளையும் சந்திக்கின்றனர். கொட்டுகின்ற எதிரிகளின் ரவைமழைகளின் மத்தியிலும், சிந்துகின்ற குருதிமழையை கட்டுப்படுத்தி எப்படியாவது எம்மண்ணின் மைந்தர்களை காப்பாற்றியே தீருவோம் எனும் போராட்டங்களை எதிர்கொள்வர். இருந்தும் போராளிகள் சிலரது உயிர்கள் பிரிந்துவிடும் கணத்தில் இவர்களது நெஞ்சுக்கூட்டுக்குள் இதயம் கசியும். இருப்பினும் தளராது, சோராது தமது தலையாய உயிர்காக்கும் உயரிய பணியில் உறுதியுடன் தொடர்ந்து செயற்பட்டு வருபவர்கள் எமது மருத்துவத்துறைப் போராளிகள். அவர்களில் ஒருவராக போராளி மருத்துவராக இருக்கும் தூயவன் இங்கே தனது போர்க்கள பதிவுகளை எழுத்துருவில் வடித்துள்ளார்.