பொதுவாகப் பெண்களே மதபக்தி மிகுந்தோர். ஆயினும் சிறுவிஷயங்களில் சந்தேகப்படல், சமாதி வணக்கத்தை நாடுதல், அநாச்சாரச் சடங்குகளைப் பின்பற்றல், அதற்காக வீண்செலவு செய்தல் முதலிய சமுதாயக் கேடுகளும் பெண்கள் மூலமாகவே முஸ்லிம் இல்லங்களில் இடம்பெறுகின்றன.
எனவே, நபி பெருமானார் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகளும், பிறகு நாற்பதாண்டுகளும் முஸ்லிம் மாதருக்கொரு முன்மாதிரியான வாழ்க்கை நடத்திய ஹஸ்ரத் ஆயிஷா அம்மையாரின் வாழ்க்கை வரலாறு இக்குறையை நீக்கக்கூடும். பெண்களின் பல்வேறு வாழ்க்கைத் துறைகள் இந்த வாழ்க்கையில் காணப்படுகின்றன.
உலக வரலாற்றிலே, எத்தனையோ மாதர்களின் வாழ்க்கை வரலாறுகள் முன்னணியில் நிற்கின்றன. ஏதோ தற்செயலாக ஏற்பட்ட காரணத்தால் சிலர் புகழ் பெற்றனர். ஒரு சிறந்த சொற்பொழிவால்- எதிரிகளின் சதித் திட்டங்களைத் தகர்த்தலால் – போர்க்களத்தில் ஆண் உடையணிந்து வெற்றிபெற்றதால் – இவ்வாறு நிரந்தரமற்ற ஒரு சிறிய காரணத்தால், சிலர் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்கள்.
ஆனால், மார்க்கம், ஒழுக்கம், தூய்மை, அரசியல், சமூகப்பண்பு, இலக்கியம் முதலியவற்றில் பெண்ணுலகிற்கு முன்மாதிரியான வாழ்க்கை ஹஸ்ரத் கதீஜா, ஹஸ்ரத் பாத்திமா, ஹஸ்ரத் ஆயிஷா போன்றோரிடமே காணப்படுகின்றது.
ஆயிஷா அம்மையாரின் அரிய வாழ்க்கை வரலாற்றிலே, ஒரு முஸ்லிம் பெண்மணியின் உண்மையான வாழ்க்கைச் சித்திரம் இருக்கின்றது. அம்மையாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிப் பெண்ணுலகம் நடக்குமாக!
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் சையத் இப்ராஹீம் அவர்கள் தனது முன்னுரையில் கூறுகிறார்.