இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தங்கள் மாபெரும் அரபிக் கிரந்தமான “இஹ்யாவு உலூமித்தீ”னை யாவரும் படித்துப் பூரணமாக விளங்க்க் கொள்வது சாத்தியமல்ல, அது முழுமையையும் படிக்க யாவருக்கும் அவகாசம் கிடைப்பதும் இயலாது என்பதை உணர்ந்தவர்களாக அதைச் சுருக்கி பாரசீக மொழியில் “கீமியாயெ ஸஆதத்”ஐ ஆக்கினார்கள். இந்தச் சுருக்கம் பெருத்த ஒரு நூலாகவே ஆகிவிடவே, இதையும் பின்னர் பெரியார்கள் பலர், சுருக்க நூல்களாக வெளியிட்டுள்ளார்கள். இத்தகைய சுருக்க நூல் ஒன்று தமிழில் வர வேண்டுவது இன்றியமையாதது என்பதை உணர்ந்தவனாகச் சில ஆண்டுகளாகவே இதைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டேன். அவ்விதம் வந்துள்ள உருது, ஆங்கிலச் சுருக்க நூல்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்த வேலையைச் செய்தேன்.
அல்கஸ்ஸாலி என்றழைக்கப்படும் அபூஹாமிது முகம்மது பின்தாஊஸ் அஹ்மத் அவர்கள் ஹிஜ்ரி 450 ஆம் ஆண்டு பாரசீகத்திலுள்ள கஸ்ஸால் என்னும் ஊரில் பிறந்தார்கள். இவர்கள் “இஸ்லாத்தின் அத்தாட்சி” என்ற பொருளை உடைய “ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” என்றும், இமாம் கஸ்ஸாலி என்றும் புகழப்பட்டார்கள். இவர்கள் பல இஸ்லாமிய நூல்களை இயற்றியுள்ளனர். இவர்களுடைய நூல்கள் அரபு மொழியிலும் பாரசீக மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. பல அரசியல் நூல்களையும் எழுதியுள்ள இமாம் கஸ்ஸாலி அவர்களால் எழுதப்பட்ட நூல்கள் முன்கிது மினல்லால், இஹ்யாஉல் உலூம், திப்றுல் மஸ்பூக், ஸிறுல் ஆலமீன், பதிஹத்துல் உலூம், கீமியாயெ ஸஆதத்து. இத்தா புல் வஜீஸ் ஆகியனவையாகும்.
இமாம் கஸ்ஸாலி அவர்களால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட ”கீமியாயெ ஸஆதத்து” கி.பி. 1270 இல் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலில் தொழுகை, ஸகாத்து, நோன்பு, ஹஜ் முதலியவை பற்றி கூறப்பட்டுள்ளன. ஆர்.பி.எம். கனி அவர்கள் தமிழில் அழகாக மொழிபெயர்த்து தந்துள்ளார். தமிழில் இதன் பெயர் ”பேரின்ப ரஸவாதம்” ஆகும்.