மிகச் சிறந்த கதை சொல்லி கனவுப் பிரியன். அதனால் அவரால் கதைகளைப் பின்னி அழகுபடுத்த முடிகிறது. அநேகமாக சர்வதேச அளவிலான மனிதர்களை தமிழ்க் கதைப்பரப்பிற்குள் கொண்டு வந்த மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவராக கனவுப் பிரியன் திகழ்கிறார். அதோடு அறிவியல் புனைவுக்கதைகளை எழுதுகிற எழுத்தாளராகவும் இருக்கிறார். எனவே கதைகளை வாசிக்கத்தொடங்குகிற வாசகனுக்கு வாசிப்பு இன்பத்தை அளிக்கிற கதைகள் இந்தத் தொகுப்பில் விரவியுள்ளன.
பெரும்பாலும் ஒரே மாதிரியான அல்லது ஒரே தொனியிலான கதைகளே தொகுப்பாக வருகின்ற காலத்தில் கனவுப் பிரியனின் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அநுபவத்தைத் தருகின்றன என்பதை சொல்லியாக வேண்டும்.
- உதயசங்கர்
பாறைபோல அழுத்தும் சோகங்களை, வலியை, தனிமையை, மெலோடிராமா எனப்படும் கதறிக் கண்ணீர் வடிக்கும் சோகம் இல்லாமல், வாசகர்களை குதறி தன்னிரக்கத்தில் ஆழ்த்தாமல்இயல்பாக அலட்சியமாக வாழ்க்கையின் ஒருபகுதியாகச் சொல்லிச் செல்லும் அந்த நடை அற்புதமானது. அரிதானதும் கூட.மனித நேயத்தின் ஒளிக்கீற்று சில இடங்களில் மின்னல்போல மின்னி மறைகிறது.
- இரா.முருகவேள்