ஏழு ஸ்வரங்களில் ஏராளமான ராகங்களில் இசையமைக்கப்பட்ட எத்தனையோ தமிழ் திரை இசைப் பாடல்கள் இன்றளவும் நமது காதுகளைக் குளிர்வித்து, நெஞ்சத்தை வருடி வருகின்றன. நவீனத் தொழில்நுட்பம் எதுவும் அறிமுகமாகாத காலகட்டத்திலேயே, காலத்தை வென்ற பாடல்களைப் பதிவு செய்து வரலாறு படைத்த இசையமைப்பாளர்கள் பலர். ‘ரிலே ரேஸ்’ மாதிரியாக ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவர், மாறிவரும் ரசனைக்கு ஏற்ப பாடல்களில் புதுமைகளைப் புகுத்தி சாதனை புரிந்து வருகிறார்கள் _ ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி! ‘ரோஜா’வில் ஆரம்பித்தது இவரது திரை இசைப் பயணம். தமிழில் வெற்றிக் கொடி நாட்டியவர், பிற மொழிப் படங்களிலும் நுழைந்து, தனித்தன்மையோடு தனி முத்திரை பதித்து, உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த திறமைசாலி. அடக்கமே உருவானவர். இந்த இசைப் புயலின் வாழ்க்கைக் கதையை சுருதி பிசகாமல் சுவையுடன் இந்த நூலில் விவரித்திருக்கிறார் கிருஷ்ணா டாவின்சி. சிறுவயதில் தந்தையை இழந்து, குடும்பப் பொறுப்புகளைத் தோளில் சுமந்து, இரவு பகல் பாராமல் இசையோடு வாழ்ந்து, வரலாறு படைத்த ஆஸ்கர் நாயகனின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களைத் தொகுத்திருக்கும் விதம், ஓர் ஆவணப் படத்தை ஆனந்தமாகப் பார்த்து ரசிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனந்த விகடனில் தொடராக வெளியான போது வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், இப்போது நூல் வடிவில். தாலாட்டுப் பாடல் ஒன்றைக் கேட்கும்போது கிடைக்கும் சுகத்தையும், குத்துப் பாட்டு காதில் விழும்போது ஏற்படும் விறுவிறுப்பையும் இந்த நூலைப் படிக்கும்போதும் அனுபவிக்க முடியும்!