உலகில் எத்தனையோ உயர்ந்த பணிகளையும், அதிகாரமிக்கப் பதவிகளையும், செல்வச் செழிப்பில் தங்கத்தால் இழைத்த அரண்மனை போன்ற சகல வசதிகளுடன் பொருந்திய வாழ்வையும் அனுபவிக்கத்தான் பலருக்கும் மனதில் ஆசை எழும். அதுவும், தான், தன் குடும்பம், தன் சொந்தம், பிறந்த ஊர், பிறந்த நாடு என்று சுயநலத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும் மனது. ஆனால், இளம் வயதிலேயே தன் தாயை விட்டு, தன் தேசத்தை விட்டு வேறொரு நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கும், வேதனையிலிருக்கும் நோயாளிகளுக்கும் ‘பணி செய்து கிடப்பதே என் கடன்’ என, தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரசா. அப்படி இந்த உலகத்தில் அனைவருக்கும் தாயான தெரசாவின் வாழ்க்கை பற்றி சொல்கிறது இந்த நூல். அவரது சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றி உருக வைக்கும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் அன்னை தெரசா தொடராக வரும்போதே வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. எத்தனையோ நூல்கள் வெளிவரலாம். சில நூல்களைப் படித்து ரசித்துவிட்டுப் போகலாம். சில புத்தகங்களைப் படிக்கலாம்; அவற்றைக் கடைப்பிடிக்க முடியாது. ஆனால், இந்தப் புத்தகம் படிக்க மட்டுமல்ல; நம்மால் முடிந்த அளவு பிறரிடம் அன்பு காட்டவும், உதவவும், கருணை கொள்ளச் செய்யவும் தூண்டுகிறது என்பது உண்மை. ஆம்... அன்பால் உலகை ஆளலாம்!