திராவிடரின் தோற்றம் பற்றிய ஆய்வு புதிய நிலையை அடைந்துள்ளது. திருவாளர்,
தீக்ஷிதர் அவர்களின் இக்கருத்து, இத்துறையில், புதிய ஆய்வுகளைத் தாண்டி
விளக்க முடியாத இப்புதிர் மீது மேலும் விளக்க ஒளியினை உறுதியாக வீசும்.
ஆரியர் திராவிடர் என்பன போலும் இனம் எதுவும் இல்லை; இந்தியா மீது
ஆரியப்படையெடுப்போ, திராவிடர் படையெடுப்போ இல்லை; பழங்கற்காலப்
பண்பாட்டிலிருந்து புதிய கற்காலப் பண்பாட்டிற்கும், புதிய கற்காலப்
பண்பாட்டிலிருந்து, பாரக்கல் நினைவுச்சின்னப் பண்பாட்டிற்கும், பாரக்கல்
நினைவுச் சின்னப் பண்பாட்டிலிருந்து இரும்பு காலப் பண்பாட்டிற்குமாக,
தொடர்ந்த இந்தியப் பண்பாட்டு வளர்ச்சி நிலை இருந்தது என்ற அவர் கொள்கை,
ஆய்வறிவுக்குப் புத்துணர்வு ஊட்டவல்லது; இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கக்
கூடியது.
தமிழகத்தில், தமிழ்ப் பண்பாட்டு நிலையில், கலை, இலக்கிய
மறுமலர்ச்சி ஒன்று இப்போது எழுந்துள்ளது. தமிழ் ஆராய்ச்சிக்குப் புதிய
புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வெளியீடு, தொடர்ந்து மேற்கொள்ள
இருக்கும் ஆராய்ச்சி உணர்வை, ஐயத்திற்கு இடரின்றித் தூண்டும். தமிழக அரசு,
ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும், தமிழக வரலாறு எழுதும் பணிக்குத் துணை
செய்யும். இந்நூலை வெளியிட முன்வந்த புகழ்மிகு முயற்சிக்குச் சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தவர், நன்றிப் பெருக்கோடு பாராட்டத்தக்கவர்.
வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற வேண்டிய
ஊக்கத்தைப் பெறத் தகுதி வாய்ந்தது இந்நூல்.