காலந்தோறும் இலக்கியங்கள் சூழலுக்கேற்ப சமுதாய நிகழ்வுகளைப் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில் புதினம், சிறுகதை, கவிதை, ஹைக்கூ போன்ற இக்கால இலக்கியங்கள் பெரும்பங்கு ஆற்றிவருகின்றன. குறிப்பாக எல்லோரும் புரிந்து கொள்கிற தன்மையில் எளிமையாகவும், சுருக்கமாகவும் கருத்துகளைக் கரைப்பதில் சிறுகதை இன்றியமையாப் பங்கு வகிக்கிறது. இன்றையச் சூழலில் பல்வேறு நிகழ்வுகளைச் சிறுகதைகள் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில் தனக்கென ஓர் எளிய நடையை அமைத்துக்கொண்டு, 'தேவமூர்த்தி சிறுகதைகள்' அருமையாக அமைந்துள்ளன. இது வரவேற்கத் தக்கவை. இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு நிகழ்வுகளைப் படம்பிடித்துக்காட்டுகிறது. என் நெஞ்சை நெருடச் செய்தவை சில கதைகள். "பெண்ணே பெரியவள்" என்ற சிறுகதை 'ஆணைவிடப் பெண் இளைத்தவள் அல்ல' ஆணுக்கு நிகர் பெண்' என்பதை வெளிக் கொணரும் தன்மையில் உள்ளது. கார்த்திக் என்பவன் சிறந்த உழைப்பாளி. அவன் தன் மனைவி இரண்டு பிள்ளைகளைத் தவிக்க விட்டுவிட்டு எதிர்பாரா விதமாக வாகன விபத்தில் இறந்து விடுகிறான். கார்த்திக்கின் நெருங்கிய நண்பன் அவன் நட்பை உணர்ந்து அவனின் மனைவிக்கு வாழ்க்கைக் கொடுக்க ஒரு நிபந்தனையோடு வாழ முடிவு செய்கிறான். நீங்கள் என் சமயத்திற்கு மாறிவரச் சம்மதித்தால் என் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறேன் என்று தெரிவித்தவுடன் அவள் தங்களைப் போலவே வேலை, வீடு வசதி வாய்ப்பில் குறைந்தவள் அல்ல, நீங்கள் என் சமயத்திற்கு மாறினால் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்கிறேன் என்று கூறி முடிக்கிறாள். இதிலிருந்து பெண்ணானவள் அனுதாபத்தால் எதனையும் பெறமாட்டாள் அது வாழ்க்கையாக இருந்தாலும் கூட என்பதை ஆசிரியர் அழகாகப் பதிவு செய்துள்ளார்.