செனிக்காவின் முழுப்பெயர் லூசியஸ் அன்னேயஸ் செனிக்கா (Lucius Annaes Seneca) ஆகும். இவருடைய பெற்றோர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். செனிக்கா கி.பி. மூன்றாம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் பேயிட்டயா கனா என்ற ரோமானிய நகரில் சொல்லிலக்கணப் (Rhetoric) பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இளம் வயதிலேயே செனிக்கா ரோம் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடைய கல்வி அங்குதான் தொடங்கியது. அவருடைய தந்தை கி.பி.37ஆம் ஆண்டு இறந்தார். செனிக்கா தனது தந்தையாரிடம் சொல்லிலக்கணக் கலையை கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின் பாய்பிரயஸ் பேபியனஸ் (Papirius Fabianus) அட்டலுஸ் (Attalus) மற்றும் சோஷன் (Sotion) ஆகியோரிடம் ஸ்டாயிக் (Sotion) தத்துவத்தைக் கற்றறிந்தார். அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஸ்டாயிக் கேட்பாடுகளை அனுசரித்து வந்தார். ஆத்மா ஒருயிரிலிருந்து இன்னோர் உயிருக்கு மாறிச் செல்லும் என்ற கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டு அசைவ உணவைத் தவிர்த்து வந்தார். பின் தந்தையின் கட்டளைக்கிணங்க சட்டம் பயின்றார். தனது வாதத்திறமையாலும் அறிவாற்றலாலும் ஒரு சிறந்த சட்ட நிபுணராகத் திகழ்ந்தார். சில அரசியல் சூழ்நிலைகளால் சட்டத் துறையிலிருந்து விலகி ஸ்டாயிக் தத்துவத்தை ஆழ்ந்து கற்றார். அரசியல் வாழ்க்கையிலும் அவர் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ரோமானியப் பேரரசர் கிளாடியஸ் (Cladius) தமக்கை மகளான ஜீலியா (Julia), செனிக்காவின் சிந்தனைகளால் ஈர்க்கப் பட்டாள். பேரரசரும் மனைவி மெஸ்ஸிலினா (Messalina) அரசரிடம் தவறான அறிவுரை சொல்லி செனிக்காவின் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. அதன் விளைவாக செனிக்கா எட்டு வருடங்களாக அரசியலில் இருந்து விலகி வாழ்ந்து வந்தார். அந்தச் சமயத்தில் தனது முதல் மனைவியை இழந்தார். அவர்களுக்கு மார்கஸ் (Marcus) என்ற மகனும் நோவாட்டில்லா (Novatilla) என்ற மகளும் அவருடன் இருந்தனர்.