இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாகவும், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களாகவும் இருந்த மோகன் குமாரமங்கலம், வி.ஜி.ராவ், ஏ.எஸ்.கே.சாரி (தோழர் ஏ.எஸ்.கே.வின் சகோதரர்) கே.வி.சங்கரன், என்.டி.வானமாமலை போன்றவர்களில் யாராவது ஒருவர் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தால் அது மிகப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருந்திருக்கும். கான்பூர் மற்றும் மீரட் சதி வழக்குகள் இரண்டிலும் தண்டனை பெற்று சிறையிலிருந்த தோழர் எஸ்.ஏ.டாங்கே, டாக்டர் ஜி.அதிகாரி, பி.சி.ஜோசி மற்றும் பகத்சிங்கின் தோழன் அஜாய்கோஷ் போன்ற தலைவர்களில் யாராவதொருவர் வாழ்ந்திருந்து இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியிருந்தால் இன்னும் பொருத்தமாக அமைந்திருக்கும்! காவல்துறையால் குற்றஞ்சாட்டப்பட்டு கைதியாக நீதிமன்றத்தில் நின்ற அனுபவம் எனக்குப் பள்ளி மாணவப் பருவத்திலேயே ஏற்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1948இல் தடை செய்யப்பட்டபோது நான் உசிலம்பட்டியில் உயர்நிலைப் பள்ளியில் நேதாஜி மாணவர் மன்றத்தில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தேன். என் அண்ணன் விக்டர் டானியல் சீனி, எனது மைத்துனர் போத்தம்பட்டி பால்ராஜ் ஆகியோர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். காவல்துறையினர் எங்கள் மூவரையும் கைதுசெய்து குற்றவியல் நீதிபதி முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்கள். நீதிபதி என்னைப் பார்த்து, "மகன் தந்தைக்கு செய்யவேண்டிய முக்கியமான கடமை என்னவென்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக் குறள் எது?" என்று என்னிடம் கேட்டார்.