வீரப்பனுக்கு பிந்தைய வனம், வன வளம், விலங்குகள் எப்படி இருக்கிறது? வீரப்பன் மரணத்திற்கு பிறகு வனத்திற்குள் உருவாகியிருக்கும் இராட்சத பண்ணைகள், ஆழ்துளை கிணறுகள், வெட்டப்பட்ட மரங்கள், அங்குள்ள பணப் பயிர்கள் உறிஞ்சி குடிக்கும் நீர், ரிசார்ட்டுகள், உயர்ந்து நிற்கும் நிலத்தின் மதிப்பு இவை எல்லாம் எந்தவிதமான பாதிப்புகளை வனத்தின் மீது உருவாக்க இருக்கிறது? என்று நினைத்து பார்க்க கூட யாருக்கும் இப்போது நேரமில்லை. அப்போது வீரப்பன் ஒருவரே இப்போது?
வயிற்றுப் பாட்டுக்காக, வீரப்பனுக்கு உதவி செய்த ஒரு சில வன மக்கள், பழங்குடிகள் ஆகியோருக்காக ஒட்டு மொத்த வன மக்களின் வாழ்க்கை முறையே மாறிப்போகும் வேலையை தமிழக கர்நாடக வனத்துறை காவல் துறையினர் செய்து விட்டனர். அம்மக்களின் சமூக பொருளாதார பண்பாட்டு வாழ்வில் செயல்முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வனத்தை எப்படியெல்லாம் பாதிக்கும்! இதைப் பற்றிய கணிப்புகள் யாரிடம் உள்ளது? இந்த கேள்விகளையும் சேர்த்தே தான் இந்தப் புத்தகம் எழுப்புகிறது.